தஞ்சாவூர் : எழுதும் எழுத்துக்களை நேராக எழுதுவதற்கே சிலர் சிரமப்படுவார்கள். ஆனால் தஞ்சையை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் தமிழ், ஆங்கில எழுத்துக்களை தலைகீழாக எழுதுகிறார். இதை கண்ணாடி முன் வைத்து பார்த்தால் நேராக தெரிகிறது. இதில் கின்னஸ் சாதனை படைப்பதே தன் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.தஞ்சை கோரிகுளம் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் கதிர்வேல். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவுரி. இந்த தம்பதிக்கு நந்தினி, கவுசல்யா என இருமகள்களும், விஷால் என்ற மகனும் உள்ளனர். இதில் கவுசல்யா (17 ) பூக்கார தெருவில் உள்ள தனியார் மகளிர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர்தான் தஞ்சைக்கு பெருமை சேர்த்து கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று கடும் உழைப்புடன் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.கவுசல்யா பள்ளியில் நடக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் தனது பங்களிப்பை கொடுத்து பரிசனை அள்ளி வந்துள்ளார். இதை விட ஒரு சிறப்பான அபார திறமையுடன் மாணவி கவுசல்யா திகழ்கிறார். தமிழ், ஆங்கில எழுத்துக்களை தலைகீழாக எழுதும் திறமைதான் அது.பொருள் மாறாமல் தலைகீழாக வேகமாக எழுகிறார். இவர் எழுதிய பேப்பரை கண்ணாடியில் பார்க்கும் போது தலைகீழாக எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் பொருள் மாறாமல் மற்றவர்கள் நேராக எப்படி எழுதுவார்களோ…அதே போல் இருக்கிறது. மாணவி கவுசல்யாவின் இந்த திறமை குறித்து சமீபத்தில்தான் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வந்துள்ளது. உடன் பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய -ஆசிரியைகள் மாணவி கவுசல்யாவை பாராட்டி ஊக்கப்படுத்தி உள்ளனர். இந்த தகவல் மாணவி வசிக்கும் பகுதி மக்களுக்கும் தெரிய வந்து தற்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.இதுகுறித்து மாணவி கவுசல்யா கூறுகையில், நான் 6-ம் வகுப்பு படிக்கும் போதே தமிழ், ஆங்கில எழுத்துக்களை தலைகீழாக எழுதினேன். அன்று முதல் இப்போது வரை அதை சிறப்பாக செய்ய பழகி விட்டேன். கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். இதற்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என்றார்….