ஊட்டி,ஜன.12: டேவிஸ் பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் சிறிய பூங்காக்கள் உள்ளன.இவைகள் அனைத்தும் ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தின் போது உருவாக்கப்பட்டது. ஆனால், இவற்றை முறையாக பராமரிக்காத நிலையில், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது.இந்நிலையில், இதனை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இப்பூங்காக்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டன. ஆனால், அதன்பின், மீண்டும் இப்பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை.இதனால், அனைத்தும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறின.மேலும், மேய்ச்சல் சிலமாகவும், புதர்கள் வளர்ந்தும் காணப்பட்டன.இதனை தொடர்ந்து இப்பூங்காக்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள டேவிஸ் பூங்கா ரூ.1 கோடியில் சீரமைக்கப்பட்டது. இதில், பல்வேறு விளையாட்டு உபகரணங்களும் பொருத்தப்பட்டன. ஆனால், இதனை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால், தற்போது பூங்காவில் மீண்டும் புதர்கள் வளர்ந்தும், புற்கள் வளர்ந்தும் காணப்பகிறது.
விளையாட்டு உபகரணங்கள் வைத்துள்ள பகுதிகள் சேறும்,சகதியுமாக மாறியுள்ளது. இதனால், இப்பூங்காவை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, இப்பூங்காவை முறையாக பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.