Sunday, May 26, 2024
Home » டெல்லிக்கு போக வேகம் காட்டும் மாங்கனி மூத்த தலைவரின் தந்திரம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

டெல்லிக்கு போக வேகம் காட்டும் மாங்கனி மூத்த தலைவரின் தந்திரம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by kannappan

‘‘டெல்லி சீட்டுக்காக தேனிக்காரர் கூட்டில் இருந்து விலகி, சேலம் விவிஐபி பக்கம் யாரு வர்றா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மேல்சபை எம்பி பதவியை பிடிக்க இலைக்கட்சியில இப்பவே கடும்போட்டியாம். இலைக்கட்சிக்கு 2 எம்பி பதவி கிடைக்க வாய்ப்பு இருக்காம். சேலம் விவிஐபியின் அதிதீவிர ஆதரவாளரான அணைப்பகுதியை சேர்ந்தவர் அந்த பதவியை தட்டிச்சென்றாராம். இம்முறை எப்படியாவது பதவியை அடையும் இலையின் மாஜி மந்திரியான ரெட்ஹில் பயங்கர முயற்சியில உள்ளாராம். இதற்காக சேலம் விவிஐபியுடன் பயபக்தியோட சுத்திக்கிட்டு வருகிறாராம். கட்சியிலேயே நான்தான் சீனியர், இந்த வயசுலயும் பம்பரமா சுத்திக்கிட்டு இருக்கேன். இப்படிப்பட்ட எனக்கு எம்பி பதவி கொடுக்காம, வேற யாருக்கு குடுப்பாங்க என்று அடிப்பொடிகளிடம் சொல்லி வருகிறாராம். ஆனா பாருங்க, சேலம் விவிஐபிக்கு ரெட்ஹில்லை சுத்தமாவே பிடிக்காதாம். ஏன்னா கூவத்தூருல இருந்து தப்பி, யுத்தக்காரர் அணியில சேர்ந்தவராம். அந்த கோவத்தை மனசுல வச்சிக்கிட்டே மாஜி இருக்காராம். தேனி கூட்டில் இருந்து வந்தவரை நம்பலாமா என்று யோசிக்கிறாராம். எனினும் சேலம் விவிஐபியின் நட்பை பெற போனமாசம் நடந்த ஆர்ப்பாட்டத்துல ரெட்ஹில் அப்படியே மயங்கி சரிந்த நேரத்தில்கூட, இடியே விழுந்தாலும் நான் விழ மாட்டேன்னு மட்டம் தட்டி பேசினாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘வேலை தர்றேன்… சம்பளம் யாரு தருவா என்று கேட்டதும் கப்சிப் போகமாட்டேன்னு.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்னு உறுதியாக இருப்பது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புல்லட்சாமி ஆட்சி நடக்கும் மாநிலத்துல 10 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதுதான் என்னுடைய முதல் வேலை என்று தேர்தல் பிரசாரத்தில் சொன்னாராம். அதற்கான கோப்புகளை அனுப்பி வைத்தாராம். நிலுவையில் உள்ள பதவி உயர்வினை கொடுக்க தயார். அதே நேரத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் மட்டும் என்னை விட்டுவிடுங்கள் என்றாராம் மாநில தலைமை அதிகாரி. மேலும், நீங்கள் சொல்ற மாதிரி 10 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கலாம். அவர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதி எங்கே இருக்கிறது. வேலை கொடுத்துவிட்டு, தெருவில் இறங்கி ஊழியர்கள் போராட்டம் செய்வார்களே.. அவர்களுக்கு பதிலை எப்படி தெரிவிப்பது என அந்த அதிகாரி வேலை இல்லை என்று சொன்னாராம். ஆனால், தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி வேலை தருவேன். ஒன்றிய அரசிடம் இருந்து அதற்கான நிதியை பெறுவேன் என்று அடித்து சொல்கிறாராம். மாநில அரசின் வரி வருவாய், ஒன்றிய அரசின் கொடை இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, இருப்பவர்களுக்கே ஒழுங்காக காலத்தோடு ஊதியம் வழங்குவதே குதிரை கொம்பாக இருக்கிறது. இது போன்ற நிலையில் புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுப்பது, பாழும் கிணற்றில் விழுவதற்கு சமம் என சொல்லி வைத்துள்ளாராம். ஆனால் புல்லட்சாமி கேட்கமாட்டேன், நிதி எங்கே எப்படி வரும் என்று நான் தெரிவிக்கிறேன். அனுமதி கொடுத்தால் மட்டும் போதும் என அழுத்தம் தருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஒரு பொறியாளர் எப்படி கான்டிராக்டருக்கு வில்லனார்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கோவை   மாநகராட்சி மத்திய மண்டல பகுதியில் மூன்று வார்டு பணிகளையும் ஒரு உதவி  பொறியாளரே கவனித்து வந்தார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள்   அடுத்தடுத்து குவிந்தது. இதனால், இவரை, மேற்கு மண்டல பகுதிக்கு இடமாற்றம்   செய்தார் அவருடைய உயரதிகாரி. அப்படியும் இவரை திருத்த முடியவில்லையாம்.  கடந்த மாதம் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்றபோது, மாமன்ற  கூட்ட  அரங்கை புதுப்பிக்கும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பணி  துவங்குவதற்கு  முன்பாகவே இவர், ஒப்பந்ததாரரிடம் ரூ.20 லட்சம் ‘சம்திங்’ வாங்கிட்டாராம்.  இந்த தகவல் தெரிந்ததும், மாநகராட்சி உயரதிகாரி, அந்த டெண்டரை  ரத்து  செய்துவிட்டார். வேறு ஒரு ஒப்பந்ததார் மூலம் பணிகளை முடித்தாராம். இதனால்,  டெண்டரை இழந்த பழைய ஒப்பந்ததாரர், ‘சார், அந்த 20  லட்சத்தை எப்ப சார்  திருப்பி தருவீங்க…’ என கேட்டு உதவி பொறியாளரை  துரத்திக்கொண்டே  இருக்கிறாராம். அவரும் தர்றேன் என்று இழுத்தடித்து கொண்டிருக்கிறாராம்…’’  என்றார் விக்கியனாந்தா.‘‘தூங்கா நகரத்தில் நடந்த பிரச்னை பற்றிச் சொல்லுங்க.. யார் யாருக்கு பிரச்னை…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தூங்கா நகரில் இலைக்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாஜி அமைச்சர் திடீரென உணர்ச்சி வசப்பட்டு பேச ஆரம்பித்தார். ‘நான் தெர்மோகோல் திட்டத்தை செயல்படுத்தியது தவறா.. மதுரைக்காரன் செய்தால், கிண்டல், கேலி செய்கிறார்களே.. எங்க ஆட்சியின்போது, சித்திரை திருவிழா வரவிருந்த நிலையில், வைகை அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என அப்போதிருந்த கலெக்டர், பொறியாளர்கள் சொன்னாங்க. ‘அதற்காக ஒரு திட்டம் வைத்துள்ளோம். தெர்மோகோல் கொண்டு மூடினால், தண்ணீர் ஆவியாவது தடுக்கப்படும்’ என்றனர். டெல்லி, ராஜஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் செயல்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தனர். பொறுப்பான அமைச்சர் என்ற முறையில், அணையை தெர்மாகோல் கொண்டு மூடும் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அது தவறா.. அதனை செயல்படுத்திய விதம் தவறாக இருந்ததால், அந்த பொறியாளர் மாற்றப்பட்டார். அதற்காக தொடர்ந்து என்னை கேலி, கிண்டல் செய்யலாமா’. எனஆதங்கத்தோடு பேசி முடித்தார்… இன்னும் தான் செய்தது தவறு இல்லை என்று பதவி போன பிறகும் பேசும் நபர் நம் தெர்மோகோல் மாஜி மந்திரியாக தான் இருப்பார்…’’ என்றார் விக்கியானந்தா….

You may also like

Leave a Comment

3 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi