போடி, மார்ச் 19: போடி அருகே டாஸ்மாக் பாரை சூறையாடி ஊழியரை தாக்கிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். தேவாரம் மல்லிங்கர்சாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் மொக்கையன் மகன் அருண்பாண்டி (24). இவர் சங்கராபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் வேலை செய்து வருகிறார். இந்த பாரில் தேவாரம் அருகில் உள்ள மல்லிகாபுரம் நடுத்தெருவை சேர்ந்த சத்தியசீலன் (42), தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தெற்கு தெருவை சேர்ந்த மாடசாமி (48) ஆகியோர் மது குடித்தனர்.
தின்பண்டங்களையும் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் பில் பணத்தை அருண் பாண்டி கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த 2 பேரும் அவதூறாக பேசி அருண்பாண்டியனை தாக்கினர். மேலும், பாரில் சுற்றி இருந்த தகர செட்டுகளையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த அருண்பாண்டி போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அருண்பாண்டி அளித்த புகாரின்பேரில் போடி தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ. ஜெயலட்சுமி வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகிறார்.