ஜெயங்கொண்டம், ஜன.10: ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 93 பேருந்துகளில் 4 பேருந்துகளை தவிர மீதமுள்ள 89 நகர புற நகர் பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கியது. ஆனால் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஏஐடியுசி, சிஐடியு அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் பஸ் ஸ்டாண்டு முன்பாகவும், போக்குவரத்து கழக பணிமனை கிளை வாயில் முன்பாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு திருச்சி மண்டல துணைத் தலைவர் நீலமேகம் தலைமை வகித்தார்.
அண்ணா தொழிற்சங்க கிளைச் செயலாளர் சோழராஜன், பாட்டாளி தொழிற்சங்க கிளைச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் பஸ் நிலையம், போக்குவரத்து கழக பணிமனை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் ஜெயங்கொண்டம் போலீஸ் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் உள்ளிட்ட போலீசார்கள் ஏராளமானோர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.