பழநி, ஜூன் 21: பழநி கிழக்கு ரத வீதியில் பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இக்கோயிலில் வரும் 26ம் தேதி ஆனித் திருமஞ்சன நிகழ்ச்சி நடக்க உள்ளது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்படும்.
தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மன், விநாயகர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெறும். இதனைத்தொடர்ந்து ரதவீதிகளில் நடராஜர்-சிவகாமி அம்மன் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.