டெல்லி : ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்காமல் தேர்தலை மட்டும் நடத்த முயற்சிப்பது வினோதமான நடவடிக்கை என்று ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார் ஜம்மு – காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்துவது குறித்த பிரதமர் மோடி உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான தலைவர்கள் மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தேர்தலுக்கு பின்னர் மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். அனைத்து கட்சி கூட்டம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், காங்கிரஸ் மற்றும் ஜம்மு – காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் முதலில் மாநில அந்தஸ்து பின்னர் தேர்தல் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.ஆனால் முதலில் தேர்தல் அடுத்ததாக மாநில அந்தஸ்து என்று ஒன்றிய அரசு கூறுகிறது. மாநில தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும் போது தான், தேர்தல் நடத்தப்பட வேண்டும். வண்டியை இழுக்கும் குதிரையை முன்னாள் கட்டாமல் வண்டிக்கு பின்னால் நிறுத்தும் அரசின் நடவடிக்கை வினோதமானது என்று ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். …