சோழவந்தான்: அடிப்படை வசதி செய்து தரவில்லை எனக்கூறி சோழவந்தான் அருகே கிராமத்திற்கு நுழைய அதிமுக வேட்பாளர் மாணிக்கத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர் கிராமத்திற்குள் நுழையாமல் திரும்பி சென்றார். காரை வழிமறித்து அவருக்கு எதிரான இளைஞர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாணிக்கம் எம்எல்ஏ போட்டியிடுகிறார். இவருக்கு தொகுதியில் பல்வேறு இடங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் பிரசாரம் செய்ய முடியாமல் தவித்து வருகிறராம். இந்த நிலையில், சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்குட்பட்ட எம்.புதுப்பட்டிக்கு நேற்றிரவு 9 மணியளவில் பிரசாரம் செய்ய மாணிக்கம் வந்தார். அப்போது அவர் காரை வழிமறித்த இளைஞர்கள் ‘‘எங்கள் ஊருக்கு சாலை வசதி செய்ய வில்லை, முக்கியமாக, எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை, எதற்காக இங்கு வருகிறீர்கள், ஊருக்குள் வராதீர்கள்’’ எனக் கூறி கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசாரும், அதிமுக நிர்வாகிகளும் இளைஞர்களை சமாதானம் செய்து அப்புறப்படுத்தி மாணிக்கம் எம்எல்ஏவின் காரை அனுப்பி வைத்தனர். இதனால் விரக்தி அடைந்த அவர் பிரசாரம் செய்யாமலேயே கிளம்பி சென்றார். தொடர்ந்து மன்னாடி மங்கலத்தில் பிரசாரம் செய்த போது ‘எங்கள் ஊருக்கு கழிப்பறை வசதி செய்வதாக கூறினீர்கள், இது வரை ஏன் கழிப்பறை கட்டித் தரவில்லை’ என பெண்கள் கேள்வி கேட்டனர். இதனால் அவசர அவசரமாக பிரசாரத்தை முடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். நேற்று காலை மேலக்காலில் சீர் மரபினர் நலச்சங்க நிர்வாகி தவமணி தலைமையில் பெண்கள் டிஎன்டி சான்றிதழ் வழங்காத ஆளுங்கட்சியை சேர்ந்த நீங்கள் ஏன் ஓட்டுக் கேட்டு வருகிறீர்கள் என எம்எல்ஏ மாணிக்கத்திடம் கேள்வி கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரசாரத்திற்கு செல்லும் பல கிராமங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருவதால், அதிமுக வேட்பாளர் மாணிக்கம் புலம்பி தவித்து வருவதாக கூறப்படுகிறது….