சோழவந்தான், ஜூலை 2: சோழவநதான் அருகே காளியம்மன் மற்றும் அங்காள ஈஸ்வரி கோயில்களில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சோழவந்தான் அருகே காடுபட்டியில் புதிதாக கட்டப்பட்ட காளியம்மன் மற்றும் புனரமைக்கப்பட்ட அங்காள ஈஸ்வரி ஆகிய கோயில்களில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் வைகையாற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று காலை சிவாச்சாரியார்கள் நாகேஸ்வரன், செந்தில் குழுவினரால் யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் கடங்கள் புறப்பாடாகி கோயில்களை வலம் வந்த நிலையில், கோபுர விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூலவர் தெய்வங்கள் மற்றும் வாய்க்கால் கருப்பணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் அரசியல் கட்சியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை காடுபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.