சோழவந்தான், டிச. 25: சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தில் ‘‘கலைஞரின் வரும் முன் காப்போம்’’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் ஹரி பிரசாத் தலைமை வகித்தார். சுகாதார மேற்பார்வையாளர்கள் முத்துராஜ், ராஜரத்தினம், சுகாதார செவிலியர் நித்திய கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி திலீபன் வரவேற்றார்.
ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரி பண்ணைச் செல்வம் குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். இதையடுத்து டாக்டர்கள் சந்திரமதி, கிஷா மகேஷ், கபீர், செல்வி, அரும்பு, மோனிஷா ஆகியோர் பொதுமக்களுக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். பாதிப்புகள் உள்ளவர்களுக்கு இசிஜி, ஸ்கேன், ரத்த பரிசோதனை, தொழு நோய் பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன.
மேலும், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள் குறித்த கண்காட்சியும் நடைபெற்றது. இம்முகாமில் கர்ப்பிணிகளுக்கு அரசு தரப்பில் சுகாதார பெட்டகம் வழங்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், ராதா கிருஷ்ணன், பிரபாகரன், இனியகுமார், விமல் மற்றும் உஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.