நாமக்கல், ஆக.27: பயணிகளின் கோரிக்கையை ஏற்று, மயிலாடுதுறை -திருச்சி, திருச்சி – கரூர், கரூர் – சேலம் ஆகிய மூன்று ரயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே ரயில் சேவையாக சேலம் – மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 28ம் தேதி முதல், நாமக்கல் வழியாக 16811 / 16812 மயிலாடுதுறை – சேலம் – மயிலாடுதுறை முன்பதிவு இல்லா தினசரி எக்ஸ்பிரஸ் சேவை தொடங்கப்படுகிறது. வண்டி எண்:16811 மயிலாடுதுறை – சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் மயிலாடுதுறையில் இருந்து, தினமும் காலை 6:20 மணிக்கு புறப்பட்டு ஆடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, குளித்தலை, கரூர் வழியாக நாமக்கல்லுக்கு மதியம் 12:29 மணிக்கு வந்து சேரும். பின்னர் நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து 12:30 மணிக்கு புறப்பட்டு, ராசிபுரம் வழியாக சேலம் சென்றடையும். மறுமார்க்கமாக வண்டி எண்: 16812 சேலம் – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில், சேலத்தில் மதியம் 2:05 மணிக்கு புறப்பட்டு, நாமக்கல் ரயில் நிலையத்திற்கு 2:54 மணிக்கு வந்து சேரும்.
பின்னர், நாமக்கல்லில் இருந்து 2:55 மணிக்கு புறப்பட்டு மோகனூர், கரூர், குளித்தலை, திருச்சி, பூதலூர், தஞ்சாவூர், ஆலங்குடி, பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை வழியாக மயிலாடுதுறை சென்றடையும். இந்த ரயில் இரு மார்க்கங்களிலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர், நாமக்கல், களங்காணி, ராசிபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதன் மூலம் நாமக்கல்லில் இருந்து இனி நேரடியாக ரயில் மூலம் திருச்சி, தஞ்சாவூர், ஆலங்குடி, பாபநாசம், சுவாமிமலை, தாராசுரம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஆடுதுறை, மயிலாடுதுறை போன்ற பகுதிகளுக்கும், அங்குள்ள ஆன்மீக தலங்களுக்கும், பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் சென்று வரலாம். இந்த ரயில் சேவையை நாமக்கல் பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தினால், தொடர்ந்து இந்த ரயில் நாமக்கல் வழியாக இயக்கப்படும் என்று ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.