பேராவூரணி: பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்குதளம் ரூ.10 கோடியில் மேம்பாடு செய்யப்படும் என, மானியக் கோரிக்கையில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளதற்கு மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரத்தில் உள்ள மீன்பிடி இறங்குதளம் சேதமடைந்து நீண்ட நாட்களாக பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது. இதனால் மீனவர்கள் விசைப்படகுகளை நிறுத்தி வைப்பதற்கும், மீன்களை இறக்கி ஏலம் விடுவதற்கும் மிகவும் சிரமத்திற்குள்ளானார்கள். மீனவர்களின் நலன்கருதி எம்எல்ஏ அசோக்குமார் மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து, சுகாதார முறையில் மீன் இறங்குதளம், படகுகள் நிறுத்தி வைப்பதற்கு படகு அணையும் சுவர், போக்குவரத்துக்கு முறையான அணுகு சாலை வசதிகள் செய்து தரவேண்டும் என கோரிக்கை மனு அளித்திருந்தார். இதை கவனத்தில் கொண்டு, முதலமைச்சர் உத்தரவுப்படி சட்டப்பேரவையில், மானியக் கோரிக்கையில், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ரூ.10 கோடி நிதி ஒதுக்கி கூடுதல் வசதிகளுடன், சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்குதளத்தை சீரமைக்க உத்தரவிட்டுள்ளார். இதனை வரவேற்று சேதுபாவாசத்திரம் மீனவர்கள் சார்பாக தமிழக முதல்வர், மீன் வளத்துறை அமைச்சர் ஆகியோரை எம்எல்ஏ அசோக்குமார் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்குதளம் ரூ.10 கோடியில் மேம்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இப்பகுதி மீனவர்கள் இடையே மகிழ்ச்சியையும் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது….