திருப்புவனம், மே 12: திருப்புவனம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் மற்றும் பாலித்தீன் பைகளை அதிரடியாக பறிமுதல் செய்து, அழித்தனர். திருப்புவனத்தில் நேற்று பழக்கடைகள், மளிகை கடைகள் மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரவணக்குமார் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ், சுகாதார மேற்பார்வையாளர்கள் ராஜேந்திரன், பாண்டி மற்றும் ஊழியர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மளிகை கடைகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாலீத்தீன் பைகள், பேப்பர் டம்ளர்கள் 25 கிலோ, அயோடின் இல்லாத உப்பு 100 கிலோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இறைச்சி கடைகளிலும் பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனை செய்தனர். மேலும் 2 பழக்கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த 500 கிலோ வாழைப்பழங்கள் மற்றும் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பேரூராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன. 2 பழக்கடைகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. டீக்கடைகளில் சூடாக பாலீதீன் பைகளில் டீ, காபி ஊற்றக் கூடாது என்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.