சென்னை: சென்னையில் மாநகர பேருந்து பயணிகளிடம் தொடர் பிக்பாக்கெட் மற்றும் செல்போன்களை அபேஸ் செய்யும் சம்பவம் அதிகளவில் நடந்து வருவதாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், குற்றவாளிகளை பிடிக்க கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில், கொருக்குப்பேட்டை ராஜிவ் காந்தி நகர் 2வது தெருவை சேர்ந்த உமாபதி (33), சரவணன் (30), கொருக்குப்பேட்டை அரிநாராயணபுரத்தை சேர்ந்த விநாயகம் (45), கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த நரேஷ் (30), தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த உமர்பாரூக் (30) ஆகிய 5 பேர், கூட்டமாக உள்ள பேருந்துகளை குறிவைத்து, அதில் பயணிகள் போல் ஏறி தொடர் பிக்பாக்கெட் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.அவர்களை பிடித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், கூட்டமாக உள்ள பேருந்துகளில் ஒரு நாளைக்கு 10 பயணிகளிடம் பணம், செல்போன் பறித்து வந்ததும், ஓடும் பேருந்தில் பயணிகளின் உடமைகள் மற்றும் செல்போன்களை அபேஸ் செய்து, பின்னால் தொடர்ந்து வரும் ஆட்டோ மற்றும் பைக்கில் ஏறி தப்பியதும் தெரியவந்தது. இந்த கொள்ளை கூட்டத்திற்கு உமாபதி தலைவனாக இருந்து வந்துள்ளார். இவர் தலைமையில் கடந்த 6 மாதங்களாக சென்னை முழுவதும் தொடர் செல்போன் மற்றும் பிக்பாக்கெட் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 108 செல்போன்கள், கொள்ளையடிக்க பயன்படுத்திய பைக் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது….