சென்னை, ஆக.28: சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன்படி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 3 குதிரை வண்டி சவாரியை மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒவ்வொரு வண்டிக்கும் 7 வீதம் குழந்தைகள் பங்கு பெற்றனர். இந்த குதிரை வண்டி சவாரி விக்டோரியா ஹால், சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், தெற்கு ரயில்வே தலைமையகம், உயர் நீதிமன்றம் வரை சென்று மீண்டும் ரிப்பன் கட்டிடத்திற்கு திரும்பியது. இதில், 60 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.