Sunday, May 19, 2024
Home » சென்னை ஐஐடியில் தொடரும் மர்ம மரணங்கள் கௌரவ விரிவுரையாளர் உடல் எரிந்த நிலையில் மீட்பு: போலீசார் தீவிர விசாரணை

சென்னை ஐஐடியில் தொடரும் மர்ம மரணங்கள் கௌரவ விரிவுரையாளர் உடல் எரிந்த நிலையில் மீட்பு: போலீசார் தீவிர விசாரணை

by kannappan

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் கேரளாவைச் சேர்ந்த கௌரவ விரிவுரையாளர் மர்மமான முறையில் எரிந்த நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் எரித்து கொலை செய்தார்களா? என்ற கோணாத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள சென்னை ஐஐடியில் நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நாட்டிலேயே முதன்மை கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி நிறுவனம் விளங்குவதால் இதில் படிப்பதற்கு மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர். இந்தநிலையில் கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர் (38), எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவு திட்ட கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இவர் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார். நேற்று மாலை விடுதியில் இருந்த உன்னிகிருஷ்ணன் திடீரென மாயமானார்.இதற்கிடையே ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானம் அருகே எரிந்து கரிக்கட்டையான நிலையில் உன்னிகிருஷ்ணன் சடலமாக கிடந்தது தெரியவந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் சம்பவம் குறித்து ஐஐடி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் ஐஐடி நிர்வாகம் கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி கோட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்த நிலையில் இறந்து கிடந்த உன்னிக்கிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் சம்பவம் குறித்து போலீசார் உன்னிகிருஷ்ணனுடன் விடுதியில் தங்கி இருந்தவர்கள் மற்றும் ஐஐடி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே உயிரிழந்த உன்னிகிருஷ்ணன் பயன்படுத்திய மடிக்கணினி, செல்போனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.  சென்னை ஐஐடி வளாகம் பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. ஐஐடி வளாகத்திற்குள் செல்ல மூன்று வழிகள் மட்டுமே உள்லது. அந்த மூன்று வழிகளிலும் ஐஐடி பாதுகாவலர்களை மீறி வெளியே ஆட்கள் யாரும் அவ்வளவு சுலபத்தில் உள்ளே செல்ல முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் உன்னிகிருஷ்ணன் இறப்பில் மர்மம் இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.கடந்த 2019ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி இறப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது மாணவிக்கு மதரீதியாக பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் நெருக்கடி கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் மாணவி இறப்பதற்கு முன்பாக தனது பெற்றோருக்கு வாட்ஸப்பில் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதால் தன்னால் படிக்க இயலவில்லை. ஆகையால் தற்கொலை முடிவிற்கு செல்கிறேன் என்று பெற்றோருக்கு குறுஞ்செய்தியில் அனுப்பியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கு அதிரடியாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டது.மாணவி இறப்பு குறித்து பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மீது போலீசார் விசாரணை நடத்தினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவமாக சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு காரணமாக பேராசிரியர் விபின் நேற்று முன் தினம் தனது ஐஐடி பேராசிரியர் பதவியில் இருந்து அதிரடியாக ராஜினாமா செய்தார். இது சென்னை ஐஐடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த கௌரவ விரிவுரையாளர் உன்னிகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் எரிந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டார். எனவே சாதி மற்றும் மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி அதனால் அவர் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து தீ வைத்து எரித்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உன்னிகிருஷ்ணன் தந்தை இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தொடர் சம்பவங்கள் சென்னை ஐஐடியில் படித்துவரும் மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது….

You may also like

Leave a Comment

one × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi