சென்னை: சென்னை அமைந்தகரையில் ஆறுமுகம் என்ற ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சேத்துப்பட்டு வைத்திய நாதன் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (36). இவர் நேற்று மதியம் சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அடையாளம் தெரியாத 4 பேர் பைக்கில் குறுக்கே வந்து ஆறுமுகத்தை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்துள்ளார். தகவல் அறிந்து அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிய ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் தலைமறைவாக இருந்த சந்திரசேகர் மற்றும் ரோஹித் ஆகிய இருவரை அமைந்தகரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். …