தா.பழூர், ஜூலை 18: அரியலூர் மாவட்ட தனியார் சிமெண்ட் ஆலைக்கு சென்னை துறைமுகத்தில் இருந்து வந்த மணி கரியில் கலப்படம் செய்த லாரி ஓட்டுனர் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தில் இயங்கும் தனியார் சிமென்ட் ஆலைக்கு சென்னை துறை முகத்தில் இருந்து மணி கரி லாரியில் கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் அவ்வாறு ஆலைக்கு வரும்போது அதில் கலப்படம் செய்யப்பட்டதாக ஆலை மேற்பார்வையாளர் நல்லேந்திரனுக்கு தகவல் வந்தது. இதில் அந்த லாரி வரும் வழியில் சுமார் ஒரு மணி நேரம் ஒரு இடத்தை கடக்காமல் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ஆலை மேற்பார்வையாளர் நல்லேந்திரன் விக்கிரமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டதில், காரில் ஜிபிஆர்எஸ் வைத்து லாரியில் வந்த மணி கரியில் ஒரு பகுதியை எடுத்து விட்டு கலப்படம் செய்துவிட்டு, பிறகு மீண்டும் ஜிபிஆர்எஸ் கருவியை லாரியில் பொருத்தியுள்ளனர். இதனையடுத்து தஞ்சாவூரை சேர்ந்த செந்தில்குமார்(39), பிரேம்சங்கர்(41), சதீஷ்குமார்(38), ஹரிஹரன்(39) மற்றும் அரியலூரை சேர்ந்த சுப்ரமணியன்(37), குமார்(39), இளையராஜா(39) ஆகியோரை விக்கிரமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.