ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தின் மேல்தளம் சேதமடைந்தும், கட்டிடத்தில் செடி, கொடிகள் முளைத்தும் காணப்படுவதால் அதை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் 1989ம் திறக்கப்பட்டது. இந்த தாலுகா அலுவலக கட்டுப்பாட்டில் ஊத்துக்கோட்டை, பென்னலூர்பேட்டை, வேளகாபுரம், பெரியபாளையம், கன்னிகைப்பேர் என 5 வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் உள்ளன. இவை 99 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.
இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் வகுப்பு, வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற பல்வேறு சான்றிதழ்கள் வேண்டி இங்கு ஒரு நாளைக்கு 200க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தாலுகா அலுவலகத்தின் மேல் தளத்தின் சிமெண்ட் சிலாப்புகள் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் கட்டிடத்தின் பின்பகுதியில் செடிகள் முளைத்துள்ளது.
மக்கள் வந்து செல்லும் இந்த அரசு அலுவலகத்தில் முறையான பராமரிப்பு இல்லாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பெண்கள் கழிவறைக்கு கதவுகள் கிடையாது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சிமெண்ட் சிலாப்புகளை சீரமைக்கவேண்டும் மேலும் கழிவறை கதவுகளை சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.