கும்பகோணம், ஏப்.14: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 4ம் தேதி வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதியுலா வந்து, காவிரியாற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், வெள்ளி ரதத்தில் திருவீதி உலா மற்றும் நாட்டிய குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியுடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் பங்குனி பெருந்திருவிழாவின் நிறைவாக நேற்று முன்தினம் காலை சண்முக பெருமானுக்கு 108 சங்காபிஷேகமும், அலங்கார தீபாரதனையும், இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று, யாதாஸ்தானம் சேருதல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத்துறை கோவில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி, மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், உபயோதாரர்கள், சிறப்பாக செய்து இருந்தார்கள்.