கம்பம், மார்ச் 9: தேனி மாவட்டத்தில் உள்ள பிரபலமான அருவிகளில் ஒன்று சுருளி அருவி. இது முக்கிய சுற்றுலாதலமாகவும் உள்ளது. இந்த நிலையில் தற்போது இங்கு விழும் குறைந்த நீரில் சுற்றுலா பயணிகள் குளித்துச் செல்கின்றனர். தென் மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு குளிப்பதற்காக வருகின்றனர். வருடத்தில் பத்து மாதம் வரை நீர்வரத்து காணக்கூடிய சுருளி அருவிக்கு மேகமலை, தூவானம் அணை, ஈத்தக்காடு, அரிசி பாறை ஆகிய நீர்ப் பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் முதல் கோடை வெயில் வாட்டி வதைப்பதால் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க துவங்கியுள்ளனர். அருவியில் குளிப்பதற்கு கட்டணமாக வனத்துறை சார்பில் ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கட்டணம் வசூலித்தாலும் சுருளி அருவிக்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் சுருளி அருவிக்கு வரும் நீரின் அளவு மிகவும் குறைந்து காணப்படுகிறது.குறைந்த அளவு தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தாலும் மகிழ்ச்சியுடன் குளியல் போட்டு செல்கின்றனர்.