ஊத்துக்கோட்டை, டிச. 28: சுருட்டபள்ளி கிராமத்தில் பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி வழிபாடு செய்தனர். ஊத்துக்கோட்டை அருகே சுருட்டபள்ளி கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆருத்ரா தரிசனம் விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு, சிவகாமி அம்பிகா சமேத நடராஜர் மூர்த்திக்கும், கோயிலில் உள்ள விநாயகர், முருகன் – வள்ளி – தெய்வானை, வால்மீகீஸ்வரர், மரகதாம்பிகா, தம்பதி சமேத தட்சணாமூர்த்தி, நவகிரகங்கள் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், 6 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 7 மணியளவில் கோயில் வளாகத்தில் இருந்து உற்சவரான சிவகாமி அம்பிகா – நடராஜ மூர்த்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு டிராக்டரில், சுருட்டபள்ளியில் உள்ள முக்கிய வீதிகளிலும், ஊத்துக்கோட்டையில் உள்ள நாகலாபுரம் சாலை, நேரு பஜார், ரெட்டி தெரு, சாவடி தெரு, திருவள்ளூர் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. அப்போது, வழிநெடுக்கிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றியும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.