குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாளாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் நீர்நிலைகள் சார்ந்த சுற்றுலா தலங்களுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுக்க தொடங்கி உள்ளனர். மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில் கடும் வெயில் காரணமாக தற்போது மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது. இதற்கிடையே விடுமுறை நாளான நேற்று (ஞாயிற்று கிழமை) கடும் வெயில் என்பதால் காலை முதலே திற்பரப்பு அருவி பகுதியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் அருவிக்கு சென்று ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர். மிதமான அளவு தண்ணீர் கொட்டுவதால் சிறுவர்கள் நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்தனர். இதேபோல் அருவியின் மேல்புறத்தில் உள்ள தடுப்பணையில் நீண்ட நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மதியத்திற்கு மேல் இந்த கூட்டம் அதிகமாகி வாகனங்கள் நிறுத்தும் பகுதி முழுவதும் நிரம்பி வழிந்தது. வாகனங்கள் சாலையோரம் ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திற்பரப்பு அருவி பகுதியில் நேற்று எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளின் கூட்டமாகவே காணப்பட்டது. வெயிலில் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் நொங்கு, இளநீர், பதனீர், பழவகைகள் விற்பனை கடைகளும் புதிது புதிதாக முளைத்து இருந்ததை பார்க்க முடிந்தது. அங்கு விற்பனையும் களை கட்டியது. மாலை நேரத்திலும் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் நீண்ட ரேம் நீராடி மகிழ்ந்துவிட்டு வீடு திரும்பினர்….