திருப்போரூர்: தமிழக வாழ்வுரிமை கட்சியில் சார்பில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து மாமல்லபுரம் பூஞ்சேரி வரை ஓஎம்ஆர் எனப்படும் பழைய மாமல்லபுரம் சாலை உள்ளது. இந்த சாலையில் பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய 4 இடங்களில் இருந்த சுங்கச்சாவடிகள் திமுக ஆட்சி அமைந்ததும் அகற்றப்பட்டன. தற்போது, நாவலூரை அடுத்துள்ள ஏகாட்டூரில் உள்ள ஒரு சுங்கச்சாவடி மட்டும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முதல் இந்த சுங்கச்சாவடியில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏகாட்டூர் சுங்கச்சாவடி முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.கே.மணி தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள், அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டு சுங்கக் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அவ்வழியே சென்ற திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சென்று பேசினார். ஏகாட்டூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை அகற்றக் கோரி நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்திருப்பதாகவும், இந்த கட்டண உயர்வு குறித்தும் அமைச்சரிடம் பேசி உள்ளதாகவும் கூறினார். தமிழக முதல்வரின் நேரடி கவனத்திற்கு இப்பிரச்னையை கொண்டு சென்று மற்ற சுங்கச்சாவடிகளை அகற்றியதுபோல் ஏகாட்டூர் சுங்கச்சாவடியையும் அகற்ற முயற்சிகளை மேற்கொள்வதாகவும் உறுதி அளித்தார்….