சீர்காழி, மார்ச் 15: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அகணி ஊராட்சி தெற்கு தென்னங்குடி கழுமலையற்றில் இருந்த பாலம் சேதமடைந்தது. இதையடுத்து புதிய பாலம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.1.54 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. ஒன்றிய பொறியாளர் மகேஸ்வரி தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் விஜேஸ்வரன், முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் மதியழகன் வரவேற்றார். சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இதில் நிர்வாகிகள் சசிகுமார், ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒப்பந்தக்காரர் சதீஷ் நன்றி கூறினார்.