மயிலாடுதுறை, பிப்.28: தமிழ்நாடு தேர்வு ஆணையம் சமீபத்தில் நடத்திய சிவில் நீதிபதி தேர்வில் மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே சங்கரன்பந்தல் முனிவலங்குடியை சேர்ந்த பாலதண்டாயுதம் என்பவர் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர், வக்கீல் எழுத்தராக பணிபுரிந்து பின்பு சட்டம் படித்து தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி அடைந்ததை பாராட்டும் வகையில் செம்பனார்கோயில் அருகே திருச்சம்பள்ளியில் உள்ள தரங்கம்பாடி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு தரங்கம்பாடி நீதிமன்றத்தின் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நீதிபதி கனிமொழி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்த ரம்யா வரவேற்றார். சிவில் நீதிபதியான பாலதண்டாயுதம் ஏற்புரையாற்றினார். தொடர்ந்து அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ராஜ்குமார், கோபிநாத், குணா, வக்கீல்கள் ராஜலட்சுமி, திவ்யா சரவணகுமார், அட்சயா, ராம்குமார், கவியரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.