சிவகங்கை, மே 5: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கடுமையான வெயில் அடித்து வருகிறது. கடந்த டிசம்பருக்கு பிறகு கன இல்லாத நிலையில் குளங்கள், கண்மாய்கள் வறண்டு காணப்பட்டன. ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து பகல் நேரங்களில் சாலையில் செல்ல முடியாத அளவிற்கு வெயில் அடித்து வரும் நிலையில் நேற்று முதல் கத்திரி வெயிலும் தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இரவு நேரம் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் சிவகங்கை பகுதியில் கன மழை பெய்தது.
கடுமையான வெயில் இருந்த நேரத்தில் மழை பெய்வது வெயிலின் தாக்கத்தை குறைத்த நிலையில் குளங்கள், கண்மாய்களுக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. கத்திரி வெயில் தொடங்கிய நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக திருப்புத்தூரில் 86.04 மி.மீ மழை பெய்தது. சிவகங்கையில் 68.02 மி.மீ, காரைக்குடியில் 63மி.மீ, மானாமதுரையில் 62.08 மி.மீ, தேவகோட்டையில் 40.04 மி.மீ, இளையான்குடியில் 20 மி.மீ, காளையார்கோவிலில் 19 மி.மீ, சிங்கம்புணரியில் 15மி.மீ, திருப்புவனத்தில் 10.08 மி.மீ மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 386.26 மி.மீ மழை பதிவானது. நேற்றும் மாலையில் திருப்புத்தூர், காரைக்குடி, சிவகங்கையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது. மானாமதுரையிலும் சாரலாக மழை பெய்த வண்ணம் இருந்தது.