சிவகங்கை, நவ. 1: நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தின் மூலம், மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை 8 கி.மீ நடப்பதை உறுதி செய்ய நடைபாதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தினமும் நடப்பதை ஒரு பழக்கமாக மாற்றும் நோக்கில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தின் மூலம், மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை 8 கி.மீ நடக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழக முதல்வர் அவர்கள் நவ.4அன்று சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் 8கி.மீ நடைபாதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் மூலம் தினமும் 10ஆயிரம் அடி(8கி.மீ) நடப்பதால் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோய் 28சதவீதமும், இதய நோய் தாக்கம் 30சதவீதமும் குறையும் என கூறப்படுகிறது. நடப்பது குறைந்து உடற்பயிற்சி இல்லாததால் தற்போது தொற்றா நோய்கள் அதிகரித்து வருகின்றன.
எனவே நடப்பதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும் எனும் நோக்கில் 8கி.மீ தூரம் கொண்ட நடைபாதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. காரைக்குடி அழகப்பா பல்கலைகழக நுழைவு வாயிலில் இருந்து உமையாள் இராமநாதன் கலைக்கல்லூரி, அழகப்பா பூங்கா, பொறியியல் கல்லூரி பல்கலைகழக கட்டிடம், தேசிய மாணவர் படை முகாம் வழியாக அழகப்பா பல்கலைகழக நுழைவு வாயிலில் முடிவடைகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபயிற்சி நடைபெறும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.