Tuesday, May 21, 2024
Home » சில்லக்குடி அரசு பள்ளி ஆண்டு விழா

சில்லக்குடி அரசு பள்ளி ஆண்டு விழா

by Dhanush Kumar

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா சில்லக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சில்லக்குடி செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா, கனிச்சாறு கலை இலக்கிய மன்ற தொடக்க விழா மற்றும் தமிழ்க்கூடல் விழா என முப்பெரும் விழாவாக கோலாகலமாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் சங்கீதா தலைமை வகித்தார். திருப்பாவை, திருவெம்பாவை, திருமந்திரம் பாடல்களை மாணவர்கள் பாடி அசத்தினர். தொடர்ந்து தமிழின் சொல்வளம், மரபுச் சொற்கள், பாரதியார் கவிதைகள், கவிஞர் மு. மேத்தா கவிதைகள், திருக்குறளின் சிறப்புகள் குறித்து மாணவர்கள் உரை வீச்சு நிகழ்த்தியதோடு, திரையிசை பாடலாசிரியர் ஆலங்குடி சோமுவின் ”கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு” என்ற பாடலையும் ”மழைச் சோறு” என்ற நாட்டுப்புற பாடலையும் மாணவர்கள் பாடி அசத்தினர். பாவேந்தரின் ”சங்கே முழங்கு” பாடலுக்கு மாணவிகள் ஆடிய நடனம் மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து ”தாயவளே தமிழ் மண்ணே” ”மண் வீசும் வாசனையும் இந்த மக்களோட யோசனையும்” என பாடல்களுக்கு மாணவர்களின் அசத்தல் நடனத்தில் அரங்கம் அதிர்ந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக இளம் கவிஞர் ஜான்சிராணி கலந்துகொண்டு சங்க இலக்கியத்தில் தொடங்கி இன்றுவரை தமிழ் மொழியின் வீச்சு குறித்து உரையாற்றினார். மேலும் சிறப்பு விருந்தினர் புலவர் அரங்கநாடன்மாணவர்களும் தமிழ் பற்றும் என்ற தலைப்பில் பேசினார். தெடர்ந்து சிறப்பு விருந்தினர் கவிஞர் பாடகர் என பன்முகம் கொண்ட அல்லிநகரம் சீனி அறிவு மழை பட்டுக்கோட்டையார் பாடல்களை பாடி மாணவர்களுக்கு உற்சாகமூட்டினார். விழாவில் மாணவர்களுக்கு பள்ளியின் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி, அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆக்னேஸ் ஸ்டெல்லா மற்றும் கிருத்திகா, உடற்கல்வி ஆசிரியர் காசிமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதையடுத்து சிலம்பம் மற்றும் கோகோ உள்ளிட்ட விளையாட்டு போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் பதக்கமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு சில்லக்குடி அரசுப் பள்ளி பேரியக்கக் குழுவின் சார்பாக தமிழ் நாட்காட்டி வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். முன்னதாக தமிழாசிரியர் கீதா அனைவரையும் வரவேற்றார். முடிவில் பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

You may also like

Leave a Comment

nineteen + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi