மேட்டுப்பாளையம், மார்ச் 22: மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளிகுப்பம்பாளையம் பகுதியில் கடந்த 15 தினங்களுக்கு மேலாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை தகவல் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று சிறுமுகை – அன்னூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் பிரஸ் குமார் மற்றும் சிறுமுகை காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஊராட்சிக்கு தண்ணீர் எடுக்கும் மூலையூரில் தண்ணீர் இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியரிடம் பேசி விரைவில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடையே தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் தங்களது மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.