திருவண்ணாமலை, அக்.20: செங்கம் அருகே 17 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, பாச்சல் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ் மகன் ஐயப்பன்(23). கூலித்தொழிலாளி. இவர், பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி தொடர்ந்து 2 ஆண்டுகளாக தொல்லை கொடுத்துள்ளார். மேலும், சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், ஐயப்பன் வீட்டுக்குச் சென்று தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, ஐயப்பனும், அவரது பெற்றோர்களும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், செங்கம் மகளிர் போலீசில் கடந்த 27.3.2021 அன்று புகார் அளித்தனர். அதன்பேரில், போக்சோ சட்டப்பிரிவின் கீழ் ஐயப்பன் மீதும், கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது தந்தை சின்னராஜ், தாய் சின்னப்பெண்ணு ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில், அரசு தரப்பில் சிறப்பு பொது வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.
அதில், 17 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபர் ஐயப்பனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஐயப்பனின் பெற்றோர் சின்னராஜ், சின்னப்பொண்ணு ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட வாலிபர் ஐயப்பனை போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.