ஒடுகத்தூர், ஏப்.25: ஒடுகத்தூர் அருகே சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் நேற்று தடுத்து நிறுத்தினர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த சின்னபள்ளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. 10ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இவருக்கும் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த உறவினரான வாலிபருக்கும் அங்குள்ள கோயிலில் இன்று (25ம் தேதி) திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இதற்கிடையில், 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் நடத்தப்படுவதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு வழக்கு பதிவு அலுவலர் சத்யா, விரிவாக்க அலுவலர் கீதா ஆகியோர் வேப்பங்குப்பம் போலீசாருடன் சம்பந்தப்பட்ட சிறுமியின் கிராமத்திற்கு நேரில் ெசன்று விசாரணை நடத்தினர். அதில், சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடப்பது உறுதியானது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோரிடம், 18 வயது பூர்த்தி அடையாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே இப்ேபாது திருமணம் செய்து வைக்கக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்து, இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும், அவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமான கடிதத்தை எழுதி வாங்கிக்கொண்டு சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, சிறுமியை மீட்டு வேலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.