கூடலூர், பிப். 23: குமுளி அருகே சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட பகுதியான அரணக்கல்-ஹில்லாஷ் பகுதியில் கண்காணிக்க சிசிடிவி கேமராவை வனத்துறையினர் பொருத்தினர். குமுளி அருகே உள்ள கிராம்பி, பருந்தும்பாறை, அரணக்கல், ஹில்லாஷ் பகுதிகளில் கடந்த சிலநாட்களாக பலரது செல்லப்பிராணிகளும், பசுமாடு உட்பட வீட்டு வளர்ப்பு விலங்குகளும் வனவிலங்கின் தாக்குதலுக்கு இரையாகி உள்ளன. கடந்த மூன்று தினங்களுக்கு முன் அரணக்கல் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரது மாடு காட்டு விலங்கால் கொல்லப்பட்டது.
அதுபோல் சிலரது வீட்டு நாய்களும் காணாமல் போனது. அதனால் வீட்டு விலங்குகளை தாக்கிகொன்றது சிறுத்தையா, புலியா என்பதில் பொதுமக்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம், வண்டிப்பெரியாறு கிராம்பி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த ஏசையாவின் சினைப்பசு வனப்பகுதியில் வனவிலங்கு தாக்கி இறந்து கிடந்ததை பார்வையிட்ட வனத்துறை ஊழியர்கள் பசுவை தாக்கி கொன்றது சிறுத்தை என உறுதி செய்தனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் புலியை பிடிக்க கூண்டு அமைக்க வனத்துறையினரை வலியுறுத்தினர். இதையடுத்து நேற்று சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க அரணக்கல்-ஹில்லாஷ் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தினர். மேலும் இப்பகுதியில் 24 மணி நேரமும் ரோந்துப்பணி தொடரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.