மதுரை, ஆக. 13: மதுரை மாவட்டம் விராதனூரில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சத்தான சிறுதானியங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுவதால் சிறு தானியங்களின் அத்தியாவசியம் சாகுபடி முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சிறுதானிய விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரம், கைத்தெளிப்பான் போன்ற இடுபொருட்கள் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.
நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் நெல்லுக்கு மாற்றாக சிறுதானியம் மற்றும் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்தால் நிலம் வளப்படும், உபரி வருமானம் கிடைக்கும் என வேளாண்மை அலுவலர் விஜயபாரதி தெரிவித்தார். மண்பரிசோதனையின் அவசியம் குறித்து மண் ஆய்வக வேளாண்மை அலுவலர் இந்து எடுத்துரைத்தார். அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் அம்சங்கள் குறித்து துணை அலுவலர் பாரதி விளக்கினார். ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் சேகர், அட்மா திட்ட அலுவலர் லதா மற்றும் உதவி தொழில் நுட்ப அலுவலர் அழகர் செய்திருந்தனர்.