தர்மபுரி, ஆக.10: தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் நடந்த சிறப்பு குறைதீர் முகாமில், 96 புகார் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி இளங்கோவன் முன்னிலை வகித்தார். மாவட்டம் முழுவதும் 31 போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து, புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்னை, குடும்ப தகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மொத்தம் 103 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 96 மனுக்கள் மீது உடனடியாக விசாரணை முடித்து வைக்கப்பட்டது. 7மனுக்கள் நிலுவையில் உள்ளது. இம்முகாமில், இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, செந்தில்குமார் மற்றும் எஸ்ஐகள், போலீசார் கலந்து கொண்டனர்.