Tuesday, June 11, 2024
Home » சிட்டிங் எம்எல்ஏவுக்கு முதல்வர் ஆதரவு முட்டை நகரத்தில் சீட்டுக்கு முட்டிமோதும் அதிமுகவினர்: ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

சிட்டிங் எம்எல்ஏவுக்கு முதல்வர் ஆதரவு முட்டை நகரத்தில் சீட்டுக்கு முட்டிமோதும் அதிமுகவினர்: ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

by kannappan

நாமக்கல்: நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில்  போட்டியிட அதிமுகவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் முதல்வரின் ஆதரவு, சிட்டிங் எம்எல்ஏவுக்கு இருப்பதால் மற்ற நிர்வாகிகள் சீட்டுக்காக முட்டிமோதும் நிலை உருவாகி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் இதயமாக திகழ்வது நாமக்கல் சட்டமன்றத் தொகுதி.  லாரி, கோழிப்பண்ணை தொழிலுக்கு பிரசித்தி பெற்றது நாமக்கல். இந்த சட்டமன்ற தொகுதியில், நாமக்கல், புதுச்சத்திரம், மோகனூர் ஆகிய 3 ஒன்றியங்கள் அடங்கியுள்ளது. 25 ஆண்டுக்கு மேலாக தனித்தொகுதியாக இருந்த நாமக்கல், கடந்த 2011ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது, பொதுத்தொகுதியாக மாறியது. கொங்கு வேளாளகவுண்டர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தொகுதியாக இது உள்ளது. பிற சமூகத்தினரும் பரவலாக வசிக்கிறார்கள். நாமக்கல் தொகுதியில் 2.57 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். நாமக்கல் தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். 2011 தேர்தலில் கொமதேக, 2016ல் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் முறை சுமார் 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், 2 வது முறை சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார். கடந்த 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, அதிமுக வேட்பாளர் காளியப்பனை விட திமுக கூட்டணி வேட்பாளர் சின்ராஜ் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் நாமக்கல் தொகுதியில்  அதிகம் பெற்றார்.  இப்படி  அதிமுக பின்தங்கியுள்ள இந்த தொகுதியில், வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் 3 வது முறையாக போட்டியிட எம்எல்ஏ பாஸ்கர் திட்டமிட்டு அதற்கான வேலையில் இறங்கியுள்ளார். கடந்த இரு மாதத்துக்கு முன்பு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் வந்து தேர்தல் பிரசாரத்தை துவக்கி, நாமக்கல் வேட்பாளர் பாஸ்கர்தான் என்பதை மறைமுகமாக கட்சியினருக்கு உணர்த்திவிட்டு சென்றுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தற்போதைய நிலவரப்படி, பாமக, தேமுதிக, பாஜக போன்ற கட்சிகள் இருந்தாலும், அந்த கட்சிகள் நாமக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு குறைவு என்பதால், அதிமுகவே மீண்டும் போட்டியிடும்  நிலை காணப்படுகிறது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய காளியப்பன், ஒன்றிய செயலாளர்கள் சேகர், ராஜா போன்றோரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தலைமையிடம் சீட்டு கேட்டு முட்டி மோத ஆயத்தமாகி வருகின்றனர். நாமக்கல் தொகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என யாரும் இல்லை. ஓபிஎஸ் தர்மயுத்தம் துவங்கிய போது, அவரது பின்னால் சென்ற முன்னாள் எம்பி சுந்தரம், மற்றும் நாமக்கல்லை சேர்ந்த ஒரு சில முன்னாள் கவுன்சிலர்களும் தற்போது இபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர்களாக மாறிவிட்டனர். கடந்த 2011 முதல் 2016 வரை நாமக்கல் நகர்மன்ற தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த கரிகாலன், ஓபிஎஸ் அணிக்கு சென்றுவிட்டு, பின்னர் அதிமுகவில் இருந்து விலகி ரஜினிமன்றத்தில் இணைந்துவிட்டார். இது போன்றவர்கள் தற்போது கட்சியில் இருந்தாலும், அவர்களை முக்கிய நிர்வாகிகள் ஓரங்கட்டியே வைத்துள்ளனர். 10 ஆண்டுகளில் தொகுதியில் பல சாதனைகளை செய்துள்ளதாக எம்எல்ஏ கூறி வந்தாலும் கோழிப்பண்ணையாளர்களுக்கு முட்டை டெண்டர், லாரி தொழிலில் சிக்கல்களை தீர்க்கும் நடவடிக்கைககள், ஒருங்கிணைந்த லாரி வளாகம்,புறநகர் பேருந்து நிலையம், ஜேடர்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் என்று தொகுதிக்கான எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தி மக்களிடம் உள்ளது. எனவே சீட்டு கிடைத்தாலும் வெற்றி பெறத்தேவையான ஓட்டு கிடைக்குமா? என்ற எண்ண ஓட்டமும் நாமக்கல் தொகுதி அதிமுகவினரிடம் எழுந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.கானல் நீராகிய முட்டை டெண்டர்கடந்த எம்பி தேர்தலின் போது, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் வலியபோய், அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். கொரோனா காலத்தில், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சர்களின்  தொகுதிக்கு பல லட்சம் முட்டைகளை இலவசமாக அள்ளிக் கொடுத்தனர். ஆனால், அந்த கோழிப்பண்ணை தொழிலில் உள்ள பிரச்னைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்த்துவைக்கவில்லை. சத்துணவு முட்டை டெண்டர் ஒரே நபரிடம் இருக்கிறது. அதை பிரித்து கோழிப்பண்ணையாளர்களும் முட்டை டெண்டரில் பங்கேற்க ஏற்பாடு செய்யவேண்டும் என்ற கோழிப்பண்ணையாளர்களின் முக்கிய கோரிக்கை கடந்த 10 ஆண்டாக கானல் நீராக இருக்கிறது. முட்டைகளை பாதுகாத்து வைக்க குளிர்பதனகிடங்கு, பறவை காய்ச்சல் பீதியை போக்க உயர்ரக ஆய்வு மையம் போன்ற திட்டங்கள் வெறும் அறிவிப்போடு நின்று போய்விட்டது.ஆரம்பிச்சிட்டாரு2மாதங்களாக கட்சி கூட்டங்களை அதிகம் நடத்தி, மாற்று கட்சியினரை சேர்க்கும் வேலையை தீவிரப்படுத்தி இருக்காரு. கடந்த 10 ஆண்டுகளில் தொகுதி முழுவதும் புதிய சாலைகள், சாலைகள் விரிவாக்கம், புதிய குடிநீர் திட்டங்கள், பூங்காங்கள் அமைப்பு, குளங்கள் தூர்வாருதல், விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையான வாய்க்கால் சீரமைப்பு பணிகளை செய்துள்ளேன். சட்டகல்லூரி, மருத்துவகல்லூரி கொண்டு வந்தது எனது தனிப்பட்ட சாதனை என்று கூறி, பாஸ்கர் எம்எல்ஏ சீட்டுக்கு ரூட்டு போடஆரம்பிச்சிட்டாரு என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இணைந்தாலும் சிக்கல்தான் வரும் நாமக்கல் தொகுதி முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் எம்பி, மாவட்ட செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை அதிமுகவில் வகித்த அன்பழகன், அமமுகவில் இணைந்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, நாமக்கல் தொகுதியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர், சாமிநாதன் 6 சட்டமன்ற தொகுதியிலும் சேர்த்து 23,347 வாக்குள் தான் பெற்றார். நாமக்கல் தொகுதியில் அமமுகவுக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை. ஒருவேளை அதிமுக- அமமுக இணையும் பட்சத்தில், அந்தகட்சியில் உள்ள மாநில நிர்வாகி ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் நாமக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்பார்கள். எனவே அமமுக-அதிமுக இணைந்தாலும் சீட்டு கிடைப்பதில் சிக்கல் வரும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.   கடும் நெருக்கடியில் லாரி உரிமையாளர்கள்லாரி உரிமையாளர்களை நெருக்கடியில் தள்ளும் அளவுக்கு கடந்த ஒரு ஆண்டாக பல நடவடிக்கையை அதிமுக அரசு மேற்கொண்டுள்ளது. வாகனங்களுக்கு தகுதிசான்று பெற குறிப்பிட்ட நிறுவனங்களின் வேககட்டுபாட்டு கருவி, ஸ்டிக்கர், ஜிபிஎஸ் கருவி பொறுத்தவேண்டும் என்ற அறிவிப்புகள் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களில் இது போன்ற எந்த நெருக்கடியும் இல்லாத நிலையில் தமிழகத்தில் மட்டும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் புதிய அறிவிப்புகளை அறிவித்து லாரி உரிமையாளர்களை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளனர். அரசின் சார்பில் போக்குவரத்து கல்லூரி அமைக்கப்படும். அனைத்து லாரி பட்டறைகளையும் ஒரே இடத்தில் செயல்பட வைக்கும் திட்டம் போன்றவை அறிவிப்புகளாவே நின்று போய்விட்டது….

You may also like

Leave a Comment

three × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi