Monday, June 10, 2024
Home » சாலை விரிவாக்க பணிக்காக பழமையான கோயில் இடிப்பு: தாம்பரம் அருகே பரபரப்பு

சாலை விரிவாக்க பணிக்காக பழமையான கோயில் இடிப்பு: தாம்பரம் அருகே பரபரப்பு

by kannappan

கூடுவாஞ்சேரி: சாலை விரிவாக்க பணிக்காக, தாம்பரம் அருகே சதானந்தபுரத்தில் நேற்று பழமையான கோயில் இடிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெடுங்குன்றம் ஊராட்சியில்,  30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் இருந்து சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுகுன்றம் வழியாக கொளப்பாக்கம் வரை ஆறு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. சதானந்தபுரம் பகுதியில் சாலையின் குறுக்கே 10 சென்ட் நிலத்தில், கடந்த 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 45 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பவானி முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இதனை அகற்றுவதற்காக வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று முன்தினம் காலை பொக்லைன் இயந்திரங்களுடன் அப்பகுதிக்கு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் நிர்வாகிகள்,  அப்பகுதியினர் என, 300க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்து தாசில்தாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஸ்ரீ சீனிவாசன், போலீஸ் உதவி கமிஷனர் சிங்காரவேலு தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில், உடன்பாடு ஏற்படாததால்,  பொதுமக்கள் போராட்டம் தொடரும் என கூறினர். இந்நிலையில், வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில், வருவாய் மற்றும்  நெடுஞ்சாலை துறையினர் நேற்று  காலை 7 மணி அளவில் அப்பகுதிக்கு பலத்த போலீஸ்  பாதுகாப்புடன் மூன்று பொக்லைன் இயந்திரங்கள் எடுத்து வந்து சாலை விரிவாக்க  பணிக்காக, மேற்படி இடத்தில் இருந்த அம்மன் கோயிலை இடித்து  தள்ளினர். இதுகுறித்து, தாசில்தார் ஆறுமுகத்திடம்  கேட்டபோது, ‘‘இப்பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் எதுவும் கிடையாது.  தற்போது சாலை ஓரத்தில் இருக்கும் இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  எனவே மேற்படி கோயில் இருந்த பின்பகுதியில் ஒதுக்குபுறமாக ஒரு பகுதியை  ஒதுக்கி உள்ளோம். அதில் சிலை வைத்து பக்தர்கள் வழிபடலாம். ’’ என்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது….

You may also like

Leave a Comment

thirteen − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi