வேடசந்தூர், மே 12: வேடசந்தூர் தாலுகா அய்யலூர் பேரூராட்சி கணவாய்ப்பட்டியை சேர்ந்தவர் நந்தகுமார்(19). இவரும் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருங்குளம் பகுதியைச் சேர்ந்த பிளமிங் ஜாய்(24) என்பவரும் ஒட்டன்சத்திரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நவாமரத்துப்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி செல்லும் வழியில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடுப்புகளை கடந்து செல்ல முயன்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் இரண்டு இளைஞர்களும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே நந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.