தர்மபுரி, மார்ச் 22: சேலம் மாவட்டம், காடையாம்பட்டி சந்தைபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் மகன் மணி(29). லாரி டிரைவரான இவர், நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் கேஜிஎப் பகுதியில் இருந்து, லாரியில் உருளைக் கிழங்கு லோடு ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் புறப்பட்டார். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பென்னேரி பகுதியில் வந்த போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது, உருளைக்கிழங்கு லாரி மோதியது. இதில், படுகாயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த காரிமங்கலம் போலீசார், மணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.