பென்னாகரம், பிப்.13: பென்னாகரத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் 1200 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். போக்குவரத்து காவல்துறை சார்பில், பென்னாகரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. டிஎஸ்பி மகாலட்சுமி கோடி அசைத்து துவக்கி வைத்தார். அரசு மருத்துவமனை அருகில் இருந்து துவங்கிய பேரணி, தாசம்பட்டி பிரிவு சாலை வழியாக தற்காலிக பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கடைவீதி, தாலுகா அலுவலகம், போடூர், நான்குரோடு வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது. இப்பேரணியில், சுமார் 1200 மாணவ- மாணவிகள் பங்கேற்று வழிப்புணர்வு ஏற்படுத்தினர். டூவீலரில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.
டூவீலரில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கக் கூடாது. வாகனங்களை அதிவேகமாக ஓட்டிச் செல்லக் கூடாது, மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது. கனரக வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக் கூடாது என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். நிகழ்ச்சியில் பென்னாகரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன், உதவி ஆய்வாளர் சின்னசாமி மற்றும் போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.