கோவை, ஆக.29: கோவை கோட்டத்தில் ரோடு பணிகள் நடத்த ஒப்பந்த அறிவிப்பு வெளியானது. டெண்டர் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பதில் தடை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒப்பந்த நிறுவனங்கள் கிரஷர் பிளான்ட், இயந்திர தளவாடங்கள் தொடர்பான தகுதி சான்று வழங்க நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாட்டு பிரிவு தாமதம் செய்வதாக தெரிவித்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்த நிறுவனங்கள் புகார் தந்தது. ஐகோர்ட் உத்தரவின் படி தகுதி சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் சாலை பணிகளுக்கான ஒப்பந்தங்கள் ஆன்லைனில் ஏற்கப்பட்டது. டெண்டர் திறக்கப்பட்டு விண்ணப்பங்கள் சரி பார்த்து தகுதியான விண்ணப்பங்களை ஏற்பது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் ஆலோசனை செய்யப்பட்டது. ஒப்பந்த நிறுவனத்தினர், ‘‘ டெண்டர் ஒதுக்கீடு முறையாக நடக்க வேண்டும். தகுதியான நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்க வேண்டும். செட்டிங் டெண்டர் நடைமுறைக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடம் தரக்கூடாது.
விதிமுறை மீறல் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், ஊழல் ஒழிப்பு துறையினருக்கு புகார் தரப்பட்டுள்ளது, ’’ என்றனர். கோவை கோட்ட மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், ‘‘ டெண்டர் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தலைமை அலுவலகம் அனுப்பி முறையாக ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் வழங்கப்படும், ’’ என்றனர்.