காரைக்குடி, செப்.25: காரைக்குடி அருகே பள்ளத்தூர் பேரூராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கியின் மூலம் கடன் வழங்கும் விழா நடந்தது. செயல்அலுவலர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். இந்தியன் வங்கி மேலாளர் சீனிவாசன் துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் சாந்தி சிவசங்கர் கடன் அனுமதி கடிதத்தை வழங்கி பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து வருகின்றனர். சாலையோர வியாபாரிகளின் நலன் காக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இப்பகுதியில் 30 வியாபாரிகள் கடன் பெற தேர்வு செய்யப்பட்டு முதல் கட்டமாக 18 நபர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை கொண்டு வியாபாரத்தை பெருக்கி வங்கிய கடனை முறையாக வங்கியில் செலுத்த வேண்டும். வாங்கிய கடனை திரும்ப முறையாக செலுத்தினால் தான் உங்களின் வியாபாரத்தை மேலும் உயர்த்த புதிய கடன்களை பெற ஏதுவாக அமையும். உங்களின் வியாபார வளர்ச்சிக்கு வங்கிகள் என்றும் உறுதுணையாக இருக்கும். பேரூராட்சி சார்பில் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றார். தொழிலதிபர் சிவசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.