கிருஷ்ணகிரி, ஆக.24: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே, சாலையோரம் ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த 25 தற்காலிக கடைகள் அகற்றப்பட்டது. கிருஷ்ணகிரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போலுப்பள்ளியில், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை ஓட்டியும், எதிரேயும் டீ கடை, சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கடைகள், தேசிய நெடுஞ்சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறாக வைத்துள்ளனர்.
தற்போது, இப்பகுதியில் மேம்பால பணிகள் மேற்கொள்ள உள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்பதாலும், கடைகளை அகற்றிக் கொள்ளும்படி, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கினர். ஆனால், கடைகள் அகற்றப்படாததால் நேற்று காலை, தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரமேஷ்பாபு, கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். தேசிய நெடுஞ்சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறாக, ஆக்கிரமித்து கடைகள், தள்ளுவண்டிகள் நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.