ராமநாதபுரம், நவ. 18: ராமநாதபுரத்தில் பத்திரப்பதிவில் காலதாமதம் செய்வதாக கூறி, சார்பதிவாளரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் நேற்று முன் தினம் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரத்தில் உள்ள வெளிப்பட்டினத்தில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பொறுப்பு சார்பதிவாளராக கண்மணி என்பவர் இருந்து வருகிறார். இவர், பத்திரப்பதிவுகளை தாமதம் செய்வதாகவும், ஆன்லைனில் பதிந்து டோக்கன் பெற்றவர்களை அலைக்கழிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் பத்திரப்பதிவிற்கு டோக்கன் பெற்றவர்களுக்கு, மாலை நேரமாகியும் பத்திரப்பதிவு செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சார்பதிவாளர் கண்மணியை, அவரது அறையில் வைத்து கதவைப் பூட்டினர். இதனால், அதிர்ச்சியடைந்த சார்பதிவாளர் ராமநாதபுரம் பஜார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து, மீண்டும் பத்திரப்பதிவு தொடர்ந்து நடக்க நடவடிக்கை எடுத்தனர். இதனால், பத்திரப்பதிவு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.