சென்னை: சார்பதிவாளர் தலைமையிலான சிறப்பு குழுக்கள், கிளப்புகளில் ஆய்வு செய்யும்போது முறைகேடு கண்டறியப்பட்டால் சங்க பதிவு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்று பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அனைத்து டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:* சங்கங்கள் சங்க பதிவாளரிடம் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளனவா எனவும் சங்க ஆண்டறிக்கைகள் குறித்த காலத்தில் கோர்வைக்கு தாக்கல் செய்யப்படுகின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டும். * சங்கங்களின் செயல்பாடுகள் சங்கப்பதிவுச் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.* சங்க கட்டுபாட்டில் உள்ள வளாகத்தில் சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிப்பதாக பதிவாளருக்கு தோன்றினால் பதிவாளர் பிரிவு 36 (6)(7)(8)ன் படி நடைமுறைகளை பின்பற்றி விசாரணை மேற்கொண்டு விசாரணை முடிவில் சங்கத்தினர் சட்ட விரோத செயல்களை மேற்கொள்வதா அல்லது சங்க வளாகத்தில் சட்ட விரோத நடவடிக்கை மேற்கொள்வது உறுதியாகும் நிலையில் சங்கத்தை ஏன் நீக்க கூடாது என்பதற்கான முன் அறிவிப்பு சங்கத்திற்கு கொடுத்து அதன் தொடர்பாக சங்கத்தினரிடம் இருந்து பதில் மனு பெறப்படும் நேரத்தில் பரிசீலனை செய்த பின் சங்கத்தின் பதிவை நீக்கலாம்.* மாவட்ட பதிவாளர்கள், பொழுதுபோக்கு, மனமகிழ் மன்றங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு சங்க நடவடிக்கைகள் சட்டத்திற்கு புறம்பான வகையில் இருப்பின் பிரிவு 38ன் படி நடவடிக்கை தொடரலாம். மேலும், இந்த ஆய்வின் பொருட்டு மாவட்ட காவல் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு சங்கங்கள் மீது தொடரப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகள் குறித்த விவரத்தினை பெற்று அதனடிப்படையில் சங்க பதிவு சட்டப்பிரிவு 37 அல்லது 38ன்படி சங்கப்பதிவினை ரத்து செய்ய உரிய செயல்முறைகளை மாவட்ட பதிவாளர்கள் தொடங்கலாம். * இந்த விவகாரம் தொடர்பாக தேவையெழும் நிலையில் சிறப்பு குழுக்கள் அதாவது மாவட்டபதிவாளர் கீழ் சார்பதிவாளர் நிலையில் உள்ள அலுவலர்களை கொண்ட குழு அமைத்து ஆய்வு பணியினை மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மண்டல அளவில் இப்பணிகளை ஒருங்கிணைந்து மண்டல டிஐஜிக்கள் கண்காணிக்க ஆணையிடப்படுகிறது.* இந்த ஆய்வின் போது கண்டறிதல் குறித்து அறிக்கையினை பதிவுத்துறை தலைவருக்கு அனுப்ப வேண்டும். இந்த ஆய்வு குறித்து நாள்தோறும் இப்பணியினை மேற்பாவையிட டிஐஜிக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதனை கண்காணித்து உடனுக்குடன் பதிவுத்துறை தலைவருக்கு தினசரி அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….