பேரணாம்பட்டு, மார்ச் 4: பேரணாம்பட்டில் சாராய வியாபாரியை கைது செய்ய சென்ற போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சாராய வியாபாரி மனைவி உட்பட 5 ேபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கோட்டைச்சேரியில் சாராயம் பதுக்கி விற்பதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பேரணாம்பட்டு சப்- இன்ஸ்பெக்டர் சரத்குமார், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது, கோட்டச்சேரி பகுதியை சேர்ந்த அருள்(35) என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.
இதற்கிடையில், தகவலறிந்த சாராய வியாபாரி அருள் மனைவி சுஷ்மிதா மற்றும் அவரது உறவினர்கள் கவிதா, ஐஸ்வர்யா, மணி, ராஜேந்திரன் ஆகியோர் போலீசார் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, அருளை அங்கிருந்த தப்பிக்க செய்ததுடன், போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சாராய வியாபாரி மனைவி சுஷ்மிதா உட்பட 5 பேர் மீது பேரணாம்பட்டு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிந்து தப்பியோடிய அருளை வலைவீசி தேடி வருகிறார். சாராய கைது செய்ய சென்ற போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.