சென்னை: திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் சென்னை திருவான்மியூரில் ரமலான் இப்தார் – நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு திமுக சிறுபான்மையினர் அணி செயலாளரும், சிறுபான்மையினர் ஆணைய துணை தலைவருமான மஸ்தான் தலைமை தாங்கினார். விழாவில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: சிறுபான்மை இயக்கத்திற்கும், திமுகவிற்கும், கலைஞருக்குமான நட்பு என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் மாற்றம் 1967ம் ஆண்டு ஏற்பட்டது. ஒரு பெரிய கூட்டணி அமைந்தது. ஆட்சிக்கு வந்தோம். அந்தக் கூட்டணியில் மிகமிக முக்கியப் பங்களித்து தோள் கொடுத்து நின்றவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் தான். எதிர்க்கட்சியாக இருந்தபோதே சிறுபான்மையினர் உரிமைக்குக் குரல் கொடுத்த திமுக, ஆட்சி அமைத்த பின்னர் ஏராளமான சாதனைகளைச் செய்து கொடுத்தது. அவருடைய வழியில் இப்போதும் சிறுபான்மையினருக்கான நன்மைகளை தொடர்ந்து செய்து வருகிறோம். அதில் மிக முக்கியமானது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் ஆகும். நம்முடைய அரசு அமைந்ததற்கு பிறகு, சிறுபான்மையினர் நல ஆணையம் அமைக்கப்பட்டு நம்முடைய மரியாதைக்குரிய பீட்டர் அல்போன்ஸ் அதன் தலைவராகவும், முன்னாள் எம்.பி. மஸ்தான் அதன் துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 3,852 உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளது. உலமாக்கள், பணியாளர் வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 பேருக்கு மிதிவண்டி தரப்பட்டுள்ளது.பள்ளிவாசல்கள், தர்காக்கள், வக்பு நிறுவனங்களைப் பழுது பார்க்க வழங்கப்படும் மானியம் ரூ.6 கோடி உயர்த்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கடந்த 11 மாத காலத்தில் செய்த பணிகள் ஆகும். அதாவது உங்களது கோரிக்கைகளை எங்களிடம் சொல்லாமலேயே நிறைவேற்றித் தரும் ஆட்சிதான் திமுக அரசு. இதைக் திமுக அரசு என்றுகூட சொல்ல மாட்டேன். நமது அரசு, நம் அனைவரின் அரசு. மதம் என்பதும், சமய நம்பிக்கைகள் என்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள் ஆகும். ஆனால் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் கிடைக்கும் நன்மையும் அதிகம், பலமும் அதிகம். தமிழினத்தை சாதியால், மதத்தால் பிரிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்.அவ்வாறு செய்தால்தான் தமிழினத்தை அழிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். நம்மைப் பிளவுபடுத்துவதன் மூலமாக, நமது வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள். அதற்குத் தமிழினம் பலியாகிவிடக் கூடாது. அதற்குப் பின்னால் இருக்கும் சதியை உணர்ந்து, தெளிந்து, புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும், அமைதியான நிம்மதியான நாடுதான் அனைத்துவிதமான வளர்ச்சியையும் பெறும். அத்தகைய வளர்ச்சிக்கான சூழ்நிலையை கடந்த ஓராண்டு காலத்தில் நம்முடைய அரசு உருவாக்கி உள்ளது. அதனால்தான் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் வளர்ச்சியானது தமிழ்நாட்டை இந்தியாவின் சிறப்பான மாநிலங்களில் முதலிடத்தைப் பெறும் அளவிற்கு முன்னோக்கி நகர்த்தி வருகிறது. இத்தகைய வளர்ச்சிக்கு அனைத்துத் தரப்பினரும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சொல்லி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இப்தார் வாழ்த்துகளை நான் சொல்ல விரும்புகிறேன். அத்தோடு இந்த நிகழ்ச்சியை எல்லோரும் பாராட்டும் வகையில் மிகுந்த எழுச்சியோடு, உணர்ச்சியோடு இதை நடத்தி வெற்றி கண்டிருக்கும் நம்முடைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புக்குரிய மஸ்தானுக்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றிகளையும் வாழ்த்துகளையும் திமுக சார்பில் தெரிவித்து என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மா.சுப்பிரமணியன், ராஜகண்ணப்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, சிறுபான்மை நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான்,திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளர்கள் அடையார் ஷபீல், தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், , எம்எல்ஏ அசன் மவுலானா, அரசின் தலைமை ஹாஜி முகமது சலாவுதீன் ஆயூப், உலமாக்கள் சபை தலைவர் இலியாஸ், பல்சமய நல்லுறவு இயக்கம் தலைவர் ஜெ.ஹாஜி முகமது ரபி, நடிகர் சங்கத்தலைவர் நாசர் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், சமுதாய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்….