கோவை: சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வைரலானதை தொடர்ந்து ஒரே அறையில் இருந்த இரட்டை கழிப்பிடம் மூடப்பட்டு, சிறுநீர் கழிக்கும் வகையில் மாற்றப்பட்டது. கோவை மாநகராட்சி 66வது வார்டு அம்மன்குளம் பகுதியில் பொது கழிப்பிடம் ஒன்று உள்ளது. இதில் உள்ள ஒரு அறையில் 2 கழிப்பிடங்கள் அருகருகே இருந்தன. நடுவில் எந்த தடுப்பும் இல்லாமல் இருந்தது. இந்த கழிப்பிட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகின. பலரும் மீம்ஸ் வாயிலாக கலாய்த்திருந்தனர். இது குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் ஷர்மிளா (பொறுப்பு) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சி 66-வது வார்டுக்கு உட்பட்ட அம்மன்குளம் பகுதியில் பொதுக்கழிப்பிடம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதில், ஆண், பெண் என இரு பாலருக்கும் கழிப்பிட வசதி உள்ளது. கூடுதலாக சிறுவர்களுக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.சிறுவர்களுக்கான கழிப்பிடத்தில் சிறுவர்கள், பெரியவர்களின் கண்காணிப்பில் இக்கழிப்பிடத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், கதவுகள் இருந்தால், குழந்தைகளால் உள்புறம் தாழிட்ட பின் திறந்து வெளியே வர இயலாது என்பதாலும் கதவுகள் பொருத்தப்படவில்லை. இக்கழிப்பிடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி, பராமரிப்பு செய்ய ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. சிறுவர்கள் உபயோகப்படுத்த அமைக்கப்பட்ட கழிப்பிடம், உபயோகம் இல்லாமல் இருப்பதால், அவைகளை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்ற ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பணி நடந்து வருகிறது. விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் அதில் கூறி இருந்தார். இந்நிலையில் அந்த இரட்டை கழிப்பிடங்கள் மூடப்பட்டு சிமென்ட் தளம் அமைக்கப்பட்டது. மேலும் அந்த இடம் சிறுநீர் கழிக்கும் வகையில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது….