ஈரோடு, நவ. 18: சபரிமலையில் சேவையாற்ற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் ஆண்டு தோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின்போது நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்ய, அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தொண்டர் படை சார்பில், கல்லூரி என்எஸ்எஸ், என்சிசி, மாணவர்கள், இளைஞர்களை தேர்வு செய்து, சபரிமலை சேவை முகாமுக்கு அனுப்பி வைக்கிறது.
அதன்படி, இந்த ஆண்டும் பக்தர்களுக்கு சேவை செய்ய, ஈரோட்டில் இருந்து தொண்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், கடந்த 15ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலும், வரும் 25ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரையிலும், டிசம்பர் 5ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலும், டிசம்பர் 15ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலும், டிசம்பர் 28ம் தேதி முதல் ஜனவரி 11ம் தேதி வரையிலும், ஜனவரி 8ம் தேதி முதல் 21ம் தேதி வரையிலும் என 6 பிரிவுகளாக தொண்டர்கள் அனுப்பி வைக்கப்படுவர்.
இவர்கள் சன்னிதானம், அப்பாச்சிமேடு, மரக்கூட்டம், பம்பை ஆகிய முகாம்களில் தங்கி, 12 நாட்களுக்கு சுக்குநீர் வினியோகம், மருத்துவ முதலுதவி சேவை, ஆக்சிஜன் பார்லர் முதலுதவி சேவை, அன்னதானம், புண்ணிய பூங்காவனம் சேவை ஆகிய பணிகளில் ஈடுபடுவர். இதில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்கள், 5 ஸ்டாம்ப் சைஸ் போட்டோ, 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் கல்லூரி மூலமாக தங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரிடம் சான்றிதழ் மற்றும் முகவரி சான்றுடன் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தை 89734 05331, 75987 45551 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.