கூடலூர், ஜன. 22: தேனி மாவட்டத்தில் உள்ள பூசாரிக்கவுண்டன் பட்டி, அப்பிபட்டி, வெள்ளையம்மாள் புரம், ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை போன்ற ஊர்களின் வரண்ட பகுதிகளின் பாசனத் தேவையை நிறைவு செய்கிறது கேகேபட்டி அருகே உள்ள சண்முகா நதி அணை. இந்த அணையை ஒட்டி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் கருவேல் மரங்கள் மற்றும் முட்செடிகள் அதிக அளவில் வளர்ந்து கிடந்தது.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மகளிர் குழுக்கள், முட்செடிகளை அகற்றி, அப்பகுதியில் நாட்டுமரக்கன்றுகள் நட பொதுப்பணித்துறையிடம் அனுமதி கேட்டனர். இதையடுத்து பொதுப்பணித்துறையினரின் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, சங்கிலி கரடு கல்லுடைக்கும் மகளிர் சங்கம், கேகே பட்டி கல்லுடைக்கும் மகளிர் சங்கம், அன்னை சத்யா மகளிர் சுய உதவிக்குழு,
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மகளிர் சுய உதவிக்குழு என இக்குழுக்களைச் சேர்ந்த 48 பெண்கள், கடந்த ஒருவார காலமாக சண்முகாநதி அணை அருகே இருந்த கருவேலமரங்கள் மற்றும் முட்செடிகளை வெட்டி அகற்றினர். தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் அப்பகுதியில், புங்கை, வேம்பு, பூவரசு, மருது, இலுப்பை, வில்வம், ஆத்தி, கொடிக்கா புளி, வேங்கை உள்ளிட்ட வகைகள் கொண்ட 2600 நாட்டு மரகன்றுகள் நட்டுள்ளனர்.